பகவான் ஸ்ரீகிருஷ்ணர் காலிங்கன் மீது நடனமாடிவிட்டு யமுனை நதியில் இருந்து வெளி வந்தபோது இரவாகி விட்டதால் விருந்தாவன வாசிகளும், பசுக்களும், கன்றுகளும் மிகவும் களைப்படைந்து, யமுனை நதிக் கரையிலலேயே ஓய்வெடுத்துக் கொள்வதென்று தீர்மானித்தார்கள். இவ்வாறு அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் திடீரென்று காட்டில் நெருப்புப் பற்றிக் கொண்டது. விரைவில் விருந்தாவன வாசிகள் எல்லோரும் நெருப்புக்கு இரையாகி விடக்கூடுமென்ற அச்சம் ஏற்பட்டது.
நெருப்பின் உஷ்ணம் அவர்களைத் தகிக்கத் தொடங்கியதும் அவர்கள் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரிடம், அப்போது அவர் ஒரு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த போதும், சரணடைந்தார்கள். அவரிடம் அவர்கள் கூறினார்கள் அன்பான கிருஷ்ணா, முழுமுதற் கடவுளானவரே, பலத்தின் சிகரமான பலராமரே, கோரமான இந்த நெருப்பு எல்லாவற்றையும் அழிக்கக் கூடியது. அதிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். உங்களைத் தவிர எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை. இந்த நாசகாரத் தீ எங்களை எல்லாம் விழுங்கி விடும். இவ்வாறு அவர்கள் கிருஷ்ணரின் பாதகமலங்களைத் தவிர வேறு புகலிடம் இல்லையென்று கூறி, அவரிடம் பிரார்த்தித்தார்கள்.
தம் ஊர்வாசிகளிடம் மிகுந்த கருணை கொண்ட கிருஷ்ணர், உடனே காட்டுத் தீ முழுவதையும் விழுங்கி, அவர்களைக் காப்பாற்றினார். இது கிருஷ்ணரால் முடியாத காரியமல்ல. ஏனெனில் அவர் வரம்பற்ற சக்தியை உடையவர். தாம் விரும்பிய எதையும் செய்ய வல்லவர். நாசகாரத் தீயை அணைத்த பின்னர் கிருஷ்ணர், நண்பர்களும், உறவினர்களும், பசுக்களும், எருதுகளும் புடைசூழ்ந்து அவரின் புகழ் பாடிவர, எப்போதும் பசுக்களால் நிறைந்திருந்த விருந்தாவனத்தை மீண்டும் அடைந்தார்.
Category: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
Tags: kids stories


No Comments